Saturday, February 18, 2012

காதலில் சொதப்புவது எப்படி?


அவள்: காதலில் சொதப்புவது எப்படி - படம் பார்த்தியாடா?
அவன்: இத படத்துல வேற போய் பார்க்கனுமா?
அவள்: $^%&%$#$#@#@#$@$#
----

இப்படித்தாங்க.. சாதாரணமா ஆரம்பிக்கிற ஒரு உரையாடல், ஒரு சாதிச்சண்டை அளவுக்கு டெவெலப் ஆகி, கடைசியில அவள் அவனைத் திட்ட, அவன் அவள்கிட்ட திட்டு வாங்க - இப்படி திட்ட திட்ட காதல் பண்றத, ரெண்டு மணி நேரம் ஜாலியா சொல்லி இருக்காங்க.

ஏற்கனவே வலை மக்களுக்கு குறும்படமா அறிமுகமான படம்தான். அதை அப்படியே மேக்சிமைஸ் செஞ்சி, பெரிய திரையில காட்டி இருக்காரு இயக்குனர். படத்தோட ஒளிப்பதிவு கோளாறா, இல்லை சாந்தி தியேட்டர் ப்ரொஜெக்டர் கோளாறானு தெரியல - தியேட்டர்லயே படம் திருட்டு விசிடி தரத்துலதான் இருந்தது. இருந்தும் படத்தோட நம்மள ஒட்ட வைக்கிறது என்னன்னு பார்த்தீங்கன்னா, பெவிகாலோ, சீட்ல ஒட்டியிருந்த பப்பிள்-கம்மோ இல்ல - காதல். அதவிட, காதலிக்க பசங்க செய்ற சொதப்பல்கள்.

அதுலயும், சித்தார்த்-அமலா பாலோட மெயின் காதல் கதைய விட, சித்தார்த் நண்பனா வர்ரவரோட சொதப்பல் செம கலக்கல். அதுதான் ஒரிஜினல் குறும்படத்தோட கதைன்னு நினைக்கிறேன் (நான் இன்னும் குறும்படத்த பார்க்கல!). "அவ உன்னத்தான்டா பார்க்குறா! லவ் பண்ணிடு மச்சி!" இப்படின்னு கூட இருந்தே ஏத்தி விடற நண்பர்களா நாம ஏணியா பார்ப்போம். ஆனா, அந்த ஏணி நம்மள எப்படி பார்க்கும்னா "மாப்ள! நீ கீழ இருந்துகிட்டு கீழ விழுந்த பெருசா அடி படாது. அதனால இந்த ஏணி வழியா மேல போய், அங்க இருந்து கீழ விழனும்! சரியா!?" -

கமிங் பேக் டூ மெயின் ஸ்டோரி - படத்துல ஹீரோ, ஹீரோயின தவிர்த்து நிறைய சுவாரசியமான கேரக்டர்களும் விஷயங்களும் இருக்குது. தமன்னா படத்தை Facebook ப்ரோபைல் போட்டோவா வச்சிருக்குற சித்தார்த் பாட்டி, அமலா பால் அப்பா- அம்மாவோட காதல் கதை (ஆமாங்க, படத்துல ஆடியன்ச தவிர மீதி எல்லாருமே காதல் பண்ணிட்டுதான் இருக்காங்க!), பாண்டிச்சேரி ட்ரிப் அப்புறம் முக்கியமா "இனிமே உண்மைதான் பேசுவேன்" அப்டின்னு காதலிகிட்ட சத்தியம் பண்ணிட்டு, இந்த டிரஸ் எப்படி இருக்குன்னு கேட்டவகிட்ட, "கேவலமா இருக்கு"ன்னு உண்மைய சொல்லி அடி வாங்குற காதலன் - இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

மொத்ததுல, ஒரு சுவாரசியமான படம்.

கடைசியா சொல்ற மெசேஜ் என்னன்னா - பசங்க எல்லாம் டிசி கரண்ட் மாதிரி - ஒரு நேரத்துல ஒரு விஷயத்த மட்டுமே யோசிச்சிட்டு அப்படியே நேரா போய்கிட்டே இருப்பாங்க. ஆனா, டிசி கரண்ட் வேலைக்காகாது. பொண்ணுங்க எல்லாம் ஏசி கரண்ட் மாதிரி. எப்பவுமே ஏசிக்கிட்டே இருக்குறதுனால இல்ல.. நிமிசத்துக்கு ஒண்ணா மாத்தி மாத்தி யோசிச்சு, அவங்களும் குழம்பி, பசங்களையும் குழப்புவாங்க. ஆனா, ஏசி கரன்ட்டுதான் வீட்டுக்குதவும். அதனாலதான் காலங்காலமா, வீட்டுல விளக்கேத்தனும்னா கல்யாணம் பண்ணிக்கோங்கறாங்க. இத புரிஞ்சிகிட்டாதன் லைப் safe. இல்லாட்டி off.
--
தினம் இரு திருக்குறள் - http://twikural.veerasundar.com/

Thursday, December 09, 2010

ஸ்மைலி

நீ முத்த ஸ்மைலி அனுப்பும்
ஒவ்வொரு முறையும்
வெட்கிச் சிவக்கிறது
என் கணினி.
வெறுமையாகக் கிடக்கிறது
என் கன்னம்.

Saturday, November 27, 2010

நந்தலாலா

சலசலவென்று மெதுவாக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை. ஓடையின் உள்ளே, அசைந்தாடிக்கொண்டிருக்கும் நீர்ச்செடிகள். நீரோடும் ஒலியைத் தவிர்த்து, வேறு ஏதும் இல்லாத, அமைதியான காட்சியாக திரையில் விரிகிறது நந்தலாலா. "இசை - இளையராஜா" என்று ஆரம்பிக்கும் இந்த காட்சிக்கும், நந்தலாலா படத்திற்கும் ஏக பொருத்தம். அமைதியான நீரோடைக்கு, அதன் ஓட்டம் இசையாவதைப் போல், மெதுவாக கடந்து செல்லும் திரைக்கதைக்கு, இசையாகி இருக்கிறார் இளையராஜா - படத்தின் முதற் கதாநாயகர்.

வயதால் சிறுவனான அகி (அஸ்வத்), மனதால் குழந்தையான பாஸ்கரனும் (மிஷ்கின்) தங்களது அம்மாக்களைத் தேடிச் செல்லும் பயணம்தான் நந்தலாலா. அகிக்கு அவனது அம்மா கன்னத்தில் ஒரே ஒரு முத்தமிட வேண்டும். பாஸ்கரனுக்கு அவனது அம்மா கன்னத்தில் ஒரு அறை விட வேண்டும். சுற்றுலா போவதாகப் பொய் சொல்லி வீட்டில் இருந்து கிளம்பும் அகி, மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்து வரும் பாஸ்கரன் என தாயைத் தேடி தனித்தனியே கிளம்பும் இந்த இருவரையும் இணைக்கிறது பயணம். இவர்களின் பயணத்தில் எதிர்கொள்ளும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான் நந்தலாலா.

திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் பல இடங்களில் வசனமே இல்லை (அல்லது குறைவு). இருந்தாலும், சொல்ல வந்ததை தெளிவாக உணர்த்தி இருக்கிறார். உதாரணமாக மிஷ்கினும், அஸ்வத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று பேசும் காட்சி. மிஷ்கின் தனது தாயின் கன்னத்தில் அறைய தேடிப் போவதாகச் சொல்ல, அதற்கு அஸ்வத் தான் தன் தாயின் கன்னத்தில் முத்தமிட அவளைத் தேடிப் போவதாகச் சொல்ல, இருவருக்கும் இடையில் நீண்டு கிடக்கிறது நெடுஞ்சாலையின் வெள்ளைக் கோடு. இதைப் போல படம் முழுக்க பல காட்சிகள். அனைத்தையும் இங்கே சொல்வதானால், படத்தின் திரைக்கதையைத்தான் முழுவதுமாக எழுத வேண்டி இருக்கும். :)

திரைமொழி குறைவு என்பதானால படம் முழுக்க இசைமொழி பேசி இருக்கிறார் இளையராஜா. அதிலும், இறுதிக்காட்சியில் மிஷ்கின் அவரது அம்மாவைப் பார்த்து அழும்பொழுது, "தாலாட்டு கேட்க" என்று உருகும் குரலாய் இளையாராஜா ஆரம்பிக்க, கேட்கும் யாருக்கும் ஒருதுளியாவது கண்ணில் நீர் துளிர்க்கும். பின்னணி இசை நம்மையும் பயணத்தில் கூட அழைத்து செல்கிறது.

சில காட்சிகளில் "அஞ்சாதே" பாதிப்பு இருந்தாலும், ஒளிப்பதிவில் பல காட்சிகள் மனதை விட்டு இன்னும் அகல மறுக்கிறது. இதைப் போல, படம் நெடுகிலும் வரும் சின்ன கதாபாத்திரங்களும் திரைக்கதையை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர். சிறுவன் அஸ்வத் பள்ளி ஆங்கிலத்தில் பிளந்து கட்ட, முரட்டு மீசை காவல் அதிகாரி ஒன்றும் புரியாமல், அஸ்வத்தை உற்று பார்க்க அரங்கில் சிரிப்பலைகள். இறுக்கமான திரைக்கதையை இலகுவாக்குவது இதைப்போல ஆங்காங்கே பரவிக் கிடக்கும் (நகைச்)சுவையான காட்சிகள்.

வாசமான ரோஜாவாக நந்தலாலா இருந்தாலும், ஆங்காங்கே சில முட்களும் எட்டிப் பார்க்கின்றன. முள்ளில்லாத ரோஜா இங்கே ஏது? அதனால் மலரை மட்டும் ரசிப்போம்.

அமைதியான, உணர்வு சார்ந்த படங்களை நீங்கள் ரசிப்பீர்கள் என்றால், நந்தலாலாவும் உங்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

Saturday, June 12, 2010

தி கராத்தே கிட் (The Karate Kid) - விமர்சனம்

விளையாட்டை கருவாக வைத்து எடுக்கப்படும் தமிழ் படங்களில்  ஒரு விஷயம் கவனித்திருக்கீர்களா? ஏதேனும் ஒரு முக்கியமான போட்டிக்காக தயாராகும் கதாநாயகன் அதிகபட்சம் பத்து தன்டால்கள், ஒரு கையில்லாத பனியன், கொஞ்சம் வியர்வை, பின் ஒரு பின்னணி பாடல் - இவற்றை மட்டும் வைத்து பயிற்சி எடுத்து போட்டி இறுதி வரை சென்று விடுவார். பின், போட்டியில் வில்லனிடம் கொஞ்சமே கொஞ்சம் அடி வாங்கி, பயிற்சியாளர் 'கமான்' சொன்னவுடன், வீறு கொண்டு வில்லனை வீழ்த்தி, பின் கதாநாயகியை கட்டிப் பிடித்து கட்டை விரல் உயர்த்துவார். அதிகபட்சமாக இந்த காட்சிகள் ஒரு பதினைந்து நிமிடங்கள் வரும். இதில் கதாநாயகனின் 'பில்டப்' காட்சிகளுக்கு மட்டுமே ஒரு பத்து நிமிடங்கள் சென்று விடும். ஆனால், இப்படி ஒரு போட்டிக்காக ஒரு சிறுவன் தயாராவதை மட்டுமே ஒரு முழு நீள படமாக எடுத்தால்?

தி கராத்தே கிட் (The Karate Kid) - பார்க்கர் (ஜேடன் ஸ்மித்) என்ற பன்னிரண்டு வயது சிறுவன் சீனாவில் நடைபெறும் கராத்தே போட்டிக்காக தயாராகிறான். அவனை தயார்படுத்துவது ஹான் (ஜாக்கிசான்) என்கிற கட்டிட பராமரிப்பாளர். பூஜ்யமாக இருந்த சிறுவனை, ஹான் புலியாக மாற்றுவதுதான் படத்தின் கதை. குறையேதும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.

அம்மாவின் பணி மாறுதல் காரணமாக, அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு வருகிறான் சிறுவன் பார்க்கர். அங்கே பார்க்கும் ஒரு சிறுமியிடம் நட்பாக ஆசைப்பட்டு அவளிடம் பேசும் போது, சிறுமியின் ஆண் நண்பன், செங் (கராத்தே கற்றவன்),  பார்க்கரை அடிக்கிறான். பின், பள்ளியில் பார்க்கும் இடங்களில் எல்லாம் செங், பார்க்கரிடம் வம்பு செய்ய, செங்கை கண்டாலே பார்க்கர் பயந்து ஓடுகிறான். ஒரு கட்டத்தில், செங்கும் அவனது பிற நண்பர்களும் பார்க்கரை சுற்றி வளைத்து அடிக்க, அவனைக் காப்பாற்றுகிறார் ஹான். பின், ஹானும் பார்க்கரும் சமாதானம் செய்ய செங்கின் கராத்தே பள்ளிக்கு செல்கிறார்கள். அங்கே நடக்கும் நிகழ்வுகளால் கராத்தே போட்டிக்காக பார்க்கரை தயார் செய்கிறேன் என்று ஹான் சவால் விட நேர்கிறது. அதில் இருந்து, ஹான் போட்டிக்காக பார்க்கரை தயார் செய்கிறார். இறுதிப் போட்டியில் (எதிர்பார்த்தபடியே) பார்க்கர், செங்கை வீழ்த்தி கோப்பையை வெல்கிறான்.

படத்தின் முக்கிய பலம் பார்க்கராக நடித்து இருக்கும் ஜேடன் ஸ்மித். வில் ஸ்மித்தின் மகனாம். டைனோசருக்கு பிறந்தது, டாக் ஆகாது (:) ) என்று நிரூபித்து இருக்கிறான். சரியான பயிற்சி இல்லாமல், எதிரியுடன் மோதி அடிவாங்கி விழும் போதும், பின் ஜாக்கிசானிடம் பயிற்சி எடுக்கும் காட்சிகளிலும், இறுதிக் காட்சிகளில் நடக்கும் கராத்தே சண்டையிலும் முழு ஈடுபாட்டுடன் நடித்து, தன் திறமையை நிரூபித்து இருக்கிறான். ஹாலிவுட்டிற்கு ஒரு கதாநாயகன் தயார்!

ஜாக்கிசானைப் பற்றி தனியாக சொல்ல தேவை இல்லை. வழக்கமாக, கதாநாயர்கள் அறிமுக காட்சி என்றாலே, கேமரா வானத்தில் இருந்து, பூமிக்கு இறங்கி கதாநாயகன் காலை பத்து முறை சுற்றி விட்டு, இடுப்பு வழியாக தலைக்கு மேலேறி இறுதியாக நாயகனின் முகத்தை காட்டுவதற்குள் நமக்கு இங்கே தலை சுற்றி கிறுகிறுத்திருக்கும். இந்த மாதிரியான வீண் காட்சிகள் எதுவுமில்லாமல் இயல்பாக திரையில் வந்து, இறுதி வரை தன் பலத்தை நிரூபித்திருக்கிறார். வயது ஏறியிருப்பது தெளிவாக தெரிந்தாலும், சண்டையின் போது அந்த வேகம் இன்னும் போகவில்லை. அதிலும், பார்க்கரை, செங்கிடம் இருந்து காப்பாற்றும் சண்டைக் காட்சியில், சிறுவர்களிடம் மோதுவதால், நேரடியாக அடிக்காமலே அவர்களை வீழ்த்துவது அருமை. ஜாக்கிசான் திரையில் வரும் போதெல்லாம், அரங்கத்தில் கேட்கும் கைதட்டலே அவரின் நடிப்பிற்கு சாட்சி. நிஜ சிங்கம்!


படத்தில், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரண்டு அம்சங்கள் - ஒளிப்பதிவு மற்றும் வசனம். கராத்தே சண்டைகளை பரபரப்பாக காட்டுவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது ஒளிப்பதிவு. வசனம் - வாய்ப்பே இல்லை. படம் முழுக்க பரவியிருக்கிறது 'நச்' வசனங்கள். எழுதியவருக்கு நன்றி சொல்ல வேண்டும். "அடிச்ச ஒன்னரை டன் வெய்ட்டுடா" என்று அதிரிபுதிரி வசனங்களை எழுதுபவர்கள் தயவு செய்து கவனிக்க!

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் - தி கராத்தே கிட்!

Tuesday, April 20, 2010

அடியாள்

சிறைக்கு சென்றதுண்டா?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சிறை என்பது வாழ்வில் ஒருமுறை கூட செல்ல விரும்பாத இடமாகவே உள்ளது. எனக்கும் அப்படித்தான். ஆனாலும் நான் ஒரு முறை சிறைக்கு சென்றிருக்கிறேன். அதுவும் சென்னை மத்திய சிறைக்கு - கைதியாக அல்ல, ஒரு பார்வையாளனாக (வேறு எதையும் எதிர் பார்த்திருந்தால், ஏமாற்றத்துக்கு மன்னிக்கவும்!). சில மாதங்களுக்கு முன், இடிக்கபடுவதற்கு முன்னால், சென்னை மத்திய சிறை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. அப்போது சிறையை பார்த்ததுதான் என் வாழ்வில் முதல் முறை (அதுவே இறுதி முறையாக இருக்க வேண்டுமென்றும் நம்புகிறேன்).

இதை இப்போது சொல்ல காரணம், நான் சமீபத்தில் சிறை அனுபவங்களை பற்றிய புத்தகம் ஒன்றினை படித்தேன். அப்புத்தகம் என் முதல் சிறை அனுபவத்தை நினைவூட்டியதுடன், அவ்வனுபவத்துக்கு உயிரூட்டவும் செய்தது. சென்னை மத்திய சிறையில் நான் பார்த்த இடிந்த கட்டிடங்களின் பின்னால் உள்ள வலிகளை புத்தக வரிகளாக என் முன் நிறுத்தியது. அப்புத்தகத்தின் பெயர் அடியாள். புத்தகத்தினை எழுதியவர் ஜோதி நரசிம்மன். 

ஒரு அரசியல் கட்சியின் அடியாளாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஜோதி நரசிம்மன், விழுப்புரத்தில் நடக்கும் ஒரு தேர்தல் கலவரத்திற்காக காவல் துறையினரால் தேடப்படுகிறார். அவரும், அவர் சகாக்களும், காவலர்களிடமிருந்து தப்பித்து தலை மறைவு வாழ்க்கையை வாழ நேரிடுகிறது. பின், கட்சி வக்கீலின் ஆலோசனைப் படி சரணடையும் இவர், கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பபடுகிறார். சில நாட்களுக்கு பின் வெளிவரும் ஜோதி நரசிம்மன், பின் மற்றொரு அரசியல் கட்சியின் போராட்டத்தில் கலந்து கொண்டு, மீண்டும் சிறை செல்ல நேரிடுகிறது. ஆனால் இம்முறை அரசியல் கைதியாக, சென்னை புழல் சிறைக்கு. சில நாட்கள் கழித்து மீண்டும் விடுதலை. பின், மனித உரிமை ஆர்வலராக தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார். இவரது இந்த சிறை அனுபவங்களே "அடியாள்"-ன் வாக்குமூலமாக புத்தமாகியுள்ளது.

எளிய நடையில், தெளிந்த மொழியில் தனது சிறை அனுபவங்களை தொகுத்துள்ளார். சிறையில் நடக்கும் பல நிகழ்வுகள் ஆச்சரியத்தை தருகின்றன. உதாரணமாக, சிறைக்குள்ளே காபி, வடை விற்கும் கைதிகள், பிரேமானந்தா சாமி, புழல் சிறையில் வைகோவை கேரோ செய்யும் ஆயுள் தண்டனை கைதிகள் என சுவாரசியமான தகவல்களுடன், கைதிகளின் கடினமான வாழ்க்கை முறை பற்றியும் எழுதியுள்ளார்.

ஆங்காங்கே சில நெருடல்கள் இருந்தாலும், அலுப்பின்றி படித்து விட முடிகிறது, இப்புத்தகத்தை.